Thursday, October 4, 2007

அனுபவத்தின் வெளிப்பாடுகள்

  • உன்னுடைய எதிர்பார்ப்பு தோல்வியடையும்போது அதன் அல்லது அவர் மீது உன்னையறியாமலே வரும் வெறுப்பை தவிர்க்க முயற்சி செய்.
  • மற்றவரின் சின்னச்சின்னக் குறைபாடுகளை சுட்டிக்காட்டும்போது வரும் மனஸ்தாபங்களை பொருட்படுத்தாதே!!
  • உன்னுடைய சிறிய தவறுகளை மற்றொருவர் குறிப்பிடும்போது மனமுவந்து ஏற்றுக்கொள்.
  • நீ இன்னொருவரிடம் உரிமை எடுத்துக்கொள்ளுமுன் அவர் உனக்கு கொடுத்திருக்கும் வரைமுறையை மனதில் வைத்துக்கொள்.
  • உலகம் உன்னை கவனமாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது என்பதை ஒருபோதும் மறவாதே.
  • சிறப்பானவற்றை செய்யும்போது பாராட்டாத உலகம் தவறான ஒன்றுக்கு தண்டிக்கக் காத்திருக்கும்.
  • உன்னைச்சுற்றியுள்ளவர்கள் எப்போதும் உன் பரம எதிரிகளென்ற கவனம் வை ஆனால் நீ நண்பனாகவே இரு.
  • நல்லது செய்ய வேண்டாம் நல்லவற்றையே நினை.
  • நீ செய்வது நல்லதோ கெட்டதோ, பலமுறை யோசித்துச் செய்.
  • நீ எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் உன் எதிர்கால மாளிகையின் ஒர் செங்கல்.
  • மற்றவர் வேதனைப்படும்போது அவர்முன் நீ சந்தோசமாக இருக்காதே
  • காயங்களுக்கு மருந்து வேண்டாம் கனிவான பார்வைபோதும்
  • எப்போது மற்றவரின் துன்பத்தை உன்னுடையதாய் நினைக்க ஆரம்பிக்கிறாயோ அப்போதுதான் நீ மனிதனாகிறாய்.
  • ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது அமைதியாய் இரு
  • கண்ணீரைத் துடைக்க வேண்டாம் கனிவான வார்த்தை போதும்
  • உன்னைச்சுற்றி எதிர்ப்பு வலுப்பெறுகிறதென்றால் நீ தலைவனாகத் தகுதியானவன்
  • எதையும் பாசத்தோடு பார் ஒவ்வொன்றும் உன்னிடம் பேசத்தொடங்கும்
  • நீ முதலில் உன்னை மதிக்கக் கற்றுக்கொள்
  • உன்னை முன்னால் நடக்கவிட்டு நீ பின்னாலிருந்து மதிப்பீடு செய்.
  • உன்னை ஒரு போதும் நீ தவறாக மதிப்பீடு செய்யாதே
  • குறைந்தபட்சம் உன்னைப்பார்ப்பவரிடம் சிரித்துவை, கடன் கேட்க மாட்டார்கள்.
  • கடன் கொடு கேட்காதே! வாங்கியதைக் கேட்காமல் கொடுத்துவிடு
  • மற்றவரின் மனைவியைத்தொடும்போதும் தூக்கத்தைக்கெடுக்கும்போதும் ஏற்படும் விளைவு ஒன்றுதான்
  • உலகத்தின் அமைதியை ரசிக்கக் கற்றுக்கொள் அது உன்னை ரசிக்கும்
  • நல்லவனாய் இருப்பதைவிட தேசபக்தனாய் இரு
  • உன் கண்முன் ஒரு தவறு நடந்தால் தயங்காமல் தட்டிக்கேள்
  • கஷ்டங்கள் பிரச்னைகள் மூலம்தான் கடவுள் உனக்கு வாய்ப்புக்களை வழங்குவார்
  • நேற்று நடந்ததை உன் கையிலும் இன்று நடப்பதை உன் கண்ணெதிரிலும் வைத்துக்கொண்டு நாளை நடப்பதை நீ நிர்ணயிக்க முடியும்.
  • எல்லாக் கடனிலும் பெரியது உன் காதுகளைக் கொடுப்பது
  • மருந்து போடவேண்டாம் குறைந்தபட்சம் மனதைப் புண்படுத்தாமலிரு.
  • உலகத்தில் ஒருவருக்குமே பிடிக்காதது மற்றவரின் புத்திமதி
  • தேவையற்ற அறிவுரை பகையை, வெறுப்பை வளர்க்கும்
  • உன் கடந்த காலங்களை கர்வத்தோடு பார் எதிர்காலம் எளிதாகத் தோன்றும்
  • உன் உணர்வுகளை மதிக்காதவனை எப்போதும் தூரத்தில் வை
  • வரிசையில் நிற்கும் போது வாய்ப்பு வந்தால் இடையில் புகாதே!
  • வரிசையில் நிற்கும்போது உன் பின்னால் நிற்பவரை ஒரு முறையாவது முன்னால் போக அனுமதி
  • தனிமையில் நல்லவனாயிரு பொதுவில் புகழப்படுவாய்
  • ஆசைகளையும் தேவைகளையும் சுருக்கிக்கொள்ளாதே! வருமானத்தைப் பெருக்கிக்கொள்
  • கூடுமானவரை ரத்த சம்பந்தமுள்ளவளை மணந்துகொள்
  • தோல்வியடையும்போது தோல்வியை மறந்துவிடு தோல்வியினால் பெறும் பாடத்தை மறந்துவிடாதே
  • மனைவியின் தகாத உறவும் மரணப்படுக்கையும் ஒன்றுதான்

Sunday, August 12, 2007

5.கண்டுகொண்டேன்!

கண், காது
கை, கால் என
எல்லாவற்றையுமே
இரண்டாகப்படைத்த இறைவன்
இதயத்தை மட்டும்
ஏன்
ஒன்றாகப்படைத்தான்….

எனது பல நாள் குழப்பம்
இன்றுதான் தீர்ந்தது…

ஆம்…
அந்த இன்னொன்று இருப்பது
உன்னிடத்தில்….

4.பேரிழப்பு

நேற்று
உன் கண்களையே
பார்த்துப் பேசிக்கொண்டிருந்த நான்…..
கையிலிருந்த என்
கவிதைத் தொகுப்பையும்!
தவற விட்டேன்

தயவுசெய்து என்
கவிதைத்தொகுப்பை மாத்திரமாவது
திருப்பிக்கொடு….

3.அன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்!

அன்னை தேசத்தை விட்டு
எண்ணை தேசத்தில்
எரியும் எண்ணற்ற
இந்தியச் சகோதரர்களுக்கு…..

பால் குடிக்கும் குழந்தையையும் மறந்து
பாதி ராத்திரி வரை தன் கணவனின்
தொலைபேசி மணிக்காகக் காத்துக்கிடந்து
மொபைல் போன்களுடனேயே
முழு வாழ்க்கையையும் வாழ்ந்து விடும்
என் தேசத்தின் கற்புக்கரசிகளுக்கு….

தள்ளாத வயதிலும்
தன் தனையன் வரவை நோக்கி
நாழிகைக் கணக்காக
நாட்களைத் தள்ளிக்கொண்டிருக்கும்
என் தாயகத்துத் தாய்மார்களுக்கு…

நிலவைக் காட்டிச் சோறு ஊட்டும்போதெல்லாம்
‘அப்பா எப்பம்மா வருவாரென'க் கேட்கும்
பச்சிளங்குழந்தையின் கண்ணில் படாமல்
கண்ணைக் கசக்கி உயிரைப் பிசைந்துத்
தொண்டை வழியாக தானும் விழுங்கும்
அந்தத் தாயுள்ளத்துக்கு….

வாழ்க்கையில் வளம் சேர்த்து
வாழ்ந்து பார்த்துவிடவேண்டுமென்ற
வைராக்யத்தோடு வையகம் விட்டு
வான்வழியே பறந்துபோய்
பொருள் தேடும் போதையில்
வாழ்க்கையை தொலைத்து விட்ட
என்னைப்போன்ற
எண்ணற்ற சகோதரனுக்கு….

இருக்கும் நாடு
வேறாக இருந்தாலும்
இதயங்கள் என்
இந்தியாவை நோக்கியே….
என்று தாய்நாட்டை எப்போதும்
தாயைப்போல் நேசிக்கும்
என் இந்தியச் செல்வங்களுக்கு…

எத்தனை யுகங்கள்
எந்தெந்த நாட்டில் இருந்தாலும்
என் கடைசி மூச்சு
என் தாய் மடியில்….
என் தாய் மண்ணில்தான்
என்ற வைராக்யத்தோடு
உயிரற்று வாழ்ந்துகொண்டிருக்கும்
உன்னதத் தோழனுக்கு….

அமெரிக்க ‘ஹைவே’யில்
அதிவேகக் கார்களில்
ஆங்கில இசைகளில்
ஆர்ப்பரிக்கச் சென்றாலும்…
ஒற்றையடிப் பாதைகளில்
சைக்கிளில் ‘விசில்’ அடித்துச் சென்றதில்
லயித்துப்போன
என் இந்திய மண்ணை
இன்றுவரை நினைத்து நெகிழ்ந்துபோகும்
நிஜமான மனங்களுக்குத்…....

தெரியும்……………

இந்த உயரின் வலி

ஏ! இந்தியனே!
உன்னைப்பெற்ற
உன் தாய்நாடு கேட்கிறேன்!

மகனே!
நீ எப்போது வருவாய்?
குறைந்தபட்சம்
என் கடைசி நிமிடங்களிலாவது!!

நீ
உன் தாய்த்திரு நாட்டில்
விளக்கேற்ற வரவேண்டாம்…
வீதி வழி போகிற பொழுதுகளிலாவது!!

என் புதல்வனே!
நீ
இழந்தது
வாழ்க்கையை மட்டுமல்ல
உன் தாய்த்திருநாட்டையும்தான்…..

எப்போது வருவாய் மகனே!
இந்தியவை நோக்கி...

கண்ணீருடன் இந்தியத்தாய்…..

2.உயிர் உண்டியல்கள்

அமைதிக்காக
ஆலயத்தினுள்
அறிவுஜீவிகள்….

வயிற்றுக்காக
வாசலில்
வறுமைக்கோடுகள்!

பிச்சைக்காரர்கள்…

1.அன்னையர் தினம்

அதிகாலையில்
அழைத்து வாழ்த்துச் சொன்னால்
அன்னையின்
அயர்ந்த தூக்கம்
கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்து வந்தான்....
பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…

ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!